Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மாட்டுவண்டி சவாரி - எங்கள் பாரம்பரியம்

Leave a Comment

மறைந்துவரும் வீர விளையாட்டுக்களில் இன்னும் மறக்கப்படாத, அழிந்துவிடாத ஒரு விளையாட்டு மாட்டுவண்டிச் சவாரி. இப்போது வெகுவாக குறைந்து விட்டாலும், எமது வீர விளையாட்டானது இன்னமும் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில், வடமாகாணத்தின் சில மாவட்டங்களில்  துடிப்போடு நடைபெறுவது ஓரளவு ஆறுதலான விடயம்.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நாட்கள், எம் பசுமையான நினைவுகளை இந்த இயந்திரங்கள் இல்லாது செய்துவிட்டன. எமது அன்றாட தேவைகளை இன்னொருவர் செய்யும் நிலைக்கு அல்லது இயந்திரம் தான் செய்யவேண்டும் என்ற நிலைக்கு கொண்டுசென்றுவிட்டன எமது கண்டுபிடிப்புகள், இப்போது யாழ்ப்பாணத்தில் மோட்டார் வாகன சவாரித்திடல் அமைப்பது பற்றி பேச்சு இருக்கும் நிலையில், சவாரித்திடல் வைத்து அதில் போட்டி நடாத்திய எங்கள் நூற்றாண்டு மேற்பட்ட பழமை இல்லாது போகும் நாள் வெகு சீக்கிரத்தில் வந்துவிடும்.

போட்டிக்கு தயாராதல் 
மாட்டு வண்டி என்பது காளை மாடுகளினால் இழுக்கப்படும் இரண்டு சக்கரம் கொண்ட வண்டி ஆகும். முன்னால் செலுத்துபவர் அமரும்  ஆசனம் இருக்கும், பின்னால் ஆட்கள் இருந்து பயணிக்கக்  கூடியவாறும், பொருட்கள் ஏற்றக்கூடியவாறும் இருக்கும். மாட்டு வண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி அடக்கிவிட முடியாது, குறிப்பிட்டு சொல்வதெனில் 1970-1990 களில் எங்களூரில் பெரும்பாலும் எல்லா நடுத்தர முதலாளிகளின் வீடுகளிலும், விவசாயிகளின் வீடுகளிலும் மாட்டுவண்டி தான் பிரதான பிரயாண மூலம். காரணம் எண்ணெய் செலவு  இல்லாத, பராமரிப்பு செலவு குறைந்த வாகனம்.

தன் காளைகளோடு கதைகளை பேசிக்கொண்டு வண்டிக்காரர் வண்டியை  செலுத்துவார், கையில் நீண்ட பூவரசம் தடி வைத்து மாட்டின் முதுகைத் தட்டி, மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார். மாட்டு வண்டிக்காரர் கையில் இருக்கும் கயிற்றை மாறி மாறி காளையின் இருபுறமும் திருப்ப சந்திகளை  வலம் இடமாக கடந்து, வாயில் நுரை தள்ள காளையும் ஆடி ஆடி போகும், இதே கயிறுதான் போகும் காளையை நிறுத்தவும் பயன்படும்.

மாட்டுக்கு லாடம் அடித்து வைத்திருப்பார்கள். லாடம் என்பது மாட்டின் காலில் அடிக்கப்படும் உலோகம், முள், கல் குற்றாமல் பாதுகாக்கும். வண்டில் மாடுகள் தார் வீதியில் போகும் போது, காலடி சத்தமும், கழுத்தில் இருக்கும் மணி சத்தமும் சேர்ந்து வரும் இசை இனிமையாக இருக்கும், 2000 இன் பின் அனுபவித்திருக்க மாட்டீர்கள். போகும் வழியில் புல்லு, வைக்கோல், தண்ணீர் கொடுக்க வேண்டும். அதற்காக வண்டியின் கீழ் சாக்கில் கட்டி வைத்திருப்பார்கள். வீடு போய் சேர்ந்தபின் தன் பிள்ளைகளை விட சிறப்பாக கவனிப்பார் அந்த வண்டிக்காரர்.

மாடுகளை கொண்டுவருத்தலும், வண்டிலை தயார் செய்தலும் 

"சங்கக்கடையில் இருந்து எங்கட பேக்கரிக்கு மாட்டுவண்டியில தான் மா மூட்டைகள் கொண்டு வருவம்" "வெட்டின நெல்லு மூடைகள் கொண்டுவருவம்," "சந்தைக்கு காய்கறிகள் கொண்டுபோவாம்" "கோயில்கள் போவம்" ஐயா சொன்ன கதைகளில் இவையும் இருக்கின்றது, மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவிலுக்கு பங்குனி திங்கள் நாட்களில் மாட்டுவண்டிகளில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் வண்டி கட்டி வந்துபோன காலமும் இருக்கிறது.  காய்கறிகள், மண்ணெண்ணெய் போன்றவை கொண்டுசென்று விற்றார்கள், காரைநகர் பக்கங்களில் இன்னமும் மாட்டுவண்டியில் மண்ணெண்ணெய் வியாபாரமும் செய்கிறார்கள். 

சவாரி மாடுகள்

வண்டில் கதைகள் முடிந்தாகிவிட்டது இனி சவாரிக்கு வருவோம் இந்த மாட்டினை வைத்து, வண்டியில் பூட்டி  மாட்டு வண்டி சவாரி நடத்தப்படும், பெரும்பாலும் சவாரிக்கு என்றே மாடுகள் சிறப்பாக  வளர்க்கப்படும்.  வளர்ப்போர் பெரும்பாலானோர் சவாரிக்காரராக இருப்பார்கள். சில பண்ணைக்காரர் வளர்த்து சவாரிக்காரருக்கு விற்பார்கள், இவ் மாட்டுவண்டிச் சவாரிக்காக வாங்கப்படும் காளைகளின் நிறங்கள், சுழி, உடல்வாகு, கொம்பு, திமில் போன்றவற்றை மிக முக்கியமாக அவதானிக்கப்படுகின்றன. வயது, ஆரோக்கியம் போன்றவையும் அவதானிக்கப்படும். சுழிகள் என்னும் போது ஏறுசுழி, இறங்குசுழி எனப்பல உண்டு.  குறிப்பிட்ட சில நிறங்களை உடைய காளைகளுக்கு விலைகளும் அதிகம், எனக்கு தெரிந்த அல்லது சவாரிக்காரர் பேசிக்கொள்ளும் நிறங்களை இணைக்கிறேன்,

காளைகளை நுகம் / துலாக்களில் பூட்டுதலும் - போட்டி ஆரம்பித்தலும் 
மாவெள்ளை, கருவெள்ளை, வெள்ளையில் மறையன், சிறுமறையன்,  நெஞ்சடி மறையன், மயிலை, சிவலை, சிலம்பன், கருப்பன்  என போட்டியில் ஈடுபடும் காளைகளுக்கு அவற்றின் விசேட தோற்றங்கள், தோலின் நிறங்கள், நிறங்களில் இருக்கும் அடையாளங்களைக் கொண்டு பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. உதாரணமாக வெள்ளை நிற காளை ஒன்றை  "தங்கராயன்ர மாவெள்ளை" என்று சொல்லுவார்கள். ஆனால் காளைச்சொந்தக்காரர் தங்கள் குலதெய்வ பெயரையோ, அல்லது பிடித்த பெயரை வைத்து தான் அழைப்பார்கள். 

சவாரிப்போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்ற கன்றுகள், சாதாரண வளர்ப்பிலிருந்து விலக்கப்பட்டு விசேடமாக வளக்கப்படுகின்றது. உணவுப்பழக்கம் முதல் அத்தனையும் வேறுபடும். அவைக்கு நெல்லுமா, கடலை, உழுந்து, பயறு என்பனவே உணவாகின்றன. சிலர் பொன்னாங்காணி தோட்டம் வைத்து உணவு கொடுத்ததாக சொல்வார்கள். திமில் திரண்டு வளரும் காளைகள் போர்க்குணத்துடன் தாக்கும் வேகத்துடன் இருக்கும். அவ்வறான காளைகளை பழக்கி எடுப்பது என்பது இலகுவான விடையம் அல்ல. மன்னர் கன்றுகள் மூர்க்கம் உடையவையாக இருக்குமாம் அவற்றை  பட்டிகளில் இருந்து கொண்டுவருவார்கள், அதேபோல் வட்டக்கச்சி கன்றுகளும் சிறப்பானவை. கொண்டுவரும் கன்றுகள் சவாரிக்காக வளர்க்கப்படும்.

சவாரித்திடலின் நடுப்பகுதி - எல்லைக்கோட்டினை அண்மித்து வெற்றிபெறும் சொந்தக்காரர் 
உணவு விடயங்களை போல் அவற்றுக்கு உடற்பயிற்சியும் அவசியம். அதற்காக சவாரிகாரர் வயல் உழுதல், நீண்டதூரங்களுக்கு வண்டியில் பூட்டி ஓடி செல்லுதல் போன்ற பல உள்ளன, இப்போது ஓட்டவீரர்களுக்கு கொடுக்கும் நீச்சல் பயிற்சி போல் இவற்றுக்கும் உள்ளது. குளங்களில் இறக்கி மறுகரைக்கு வர மாடும் நீந்தி வரும் அப்போது நீச்சல் பயிற்சி வருமாம்.

இவ்வாறு வளர்க்கும் காளைகளுக்கு அடுத்தது சவாரித்திடல் சோதனை, பொதுவாக வயதின் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கின்றனர். வயது பற்களில் இருந்து கணிக்கப்படுகின்றது, வருடங்கள் கடக்க பற்களை உடைக்குமாம். உடைந்திருக்கும் பல்லினை வைத்து வயதினை கணிப்பார்கள். வயதிற்கு ஏற்ப காளைகளின் விசைகள் வேறுபடும். A,B,C,D அல்லது அ, ஆ. இ, ஈ என்பது சவாரி மாடுகளை வகைப்படுத்தும் முறையாகும். அதாவது போட்டிக்காக வளர்க்கும் மாடுகளை போட்டி அல்லாத நேரத்தில் வண்டிலில் கட்டி, சவாரித்திடலில் ஓடவிட்டு மாட்டின் விசையை கணக்கிடுவார்கள், குறித்த நீள திடலை கடக்க எடுக்கும் நேரத்தில் இருந்து பெறப்படும் இந்த விசை. பொதுவாக "அ" வகை காளைகள் சில நொடிப்பொழுதுகளில் கடந்துவிடும்.இந்த சோதனையில் தோற்றுப்போகும் காளைகள் வயல், தோட்ட வேலைகளில் பயன்படுத்தப்படும்.  சவாரிக்காரர்களால் தெரிவுசெய்யப்படும் காளைகள் போட்டியில் களமிறங்கும்.

சவாரி வண்டில்களும் குறைந்த பாரமுடையதும், மிகுந்த உறுதியாகவும் பலமாகவும் இருக்கவேண்டும். பாலை முதிரை போன்றன இவற்றுக்கு  பயன்படும். சில்லுகளுக்கு பூவரசு, சில்லுகளை சுற்றி உலோகவளையம், சில்லுகளை வண்டிலுடன் இணைக்க அச்சாணி உலோகத்திலும், மாடுகளை இணைக்கும் துலா அல்லது நுகம் அமைக்க கமுகு போன்றனவும் பயன்படுகின்றது.

மாடு வண்டிச் சவாரி 

முன்னைய காலங்களில் வீதிகளிலேயே இந்த சவாரிகள் நடைபெற்றது. முன்னோரால் தெருச் சவாரி எனப்பட்ட இவை,  அச்செழு வீதிகள், மருதனார்மட வீதி, போன்ற இடங்களில் நடைபெற்று. பின்னர் சவாரிக்கு என்றே வீதிகள் அமைத்து நடாத்தினார்கள். இன்னும் அந்த வீதிகள் சவாரி வீதிகள் என்று சொல்லப்படுகின்றன. குறைப்பிட்டு சொன்னால் மீசாலை நவக்கிரி போன்ற இடங்களை குறிப்பிடலாம்.

காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக விடுவார்களாம், பின்னால் போகும் காளைச்சோடி முன்னால் போவதை முந்தவேண்டுமாம், இல்லாவிடின் மாறி விடுவார்களாம், அதனிலும் குறை இருப்பின் மாட்டினை சோடி மாற்றி விடுவார்களாம். அதன் பின்னர் 1955 இன் பின் முற்றவெளியில், பலாலி விமான நிலையத்திற்கு அண்மையான இடங்களில் இந்த சவாரிகள் நடாத்தப்பட்டது. இதன் பின்னர் தான் சவாரித்திடல் அமைத்து போட்டிகளை நடாத்தினார்கள்.
வெற்றி பெற்ற காளை  - வெற்றியை தவறவிட்ட காளை 
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் மட்டுவில், சரசாலை, வட்டுக்கோட்டை, பொன்னாலை, ஆவரங்கால், நீர்வேலி, நவாலி, மூளாய், கந்தரோடை போன்ற இடங்களில் சவாரித்திடல் அமைத்து சவாரிகளை நடாத்தினார்கள். வடமாகாணத்தின் ஏனைய இடங்களான கிளிநொச்சி விசுவமடு, வட்டக்கச்சி, முல்லைதீவு, மன்னர் போன்ற இடங்களிலும் இவை நடைபெறுகின்றன. 

முன்பு தடியில் ஊசி வைத்து அடிப்பது, சாராயம் பருக கொடுப்பது போன்றன நடைபெற்றாலும், இப்போது சங்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறை மூலம் இவற்றை முற்றாக தடைசெய்து விட்டார்கள்.

காளைகளை சவாரியிடல் 


"காளை சொந்தக்காரர்கள் அதிஷ்டம் பார்க்கும் இடத்திற்கு வந்து சுவட்டு ஒழுங்கினை பெற்றுக்கொள்ளவும்"

என்ற அழைப்போடு ஆரம்பமாகும். அதிஷ்டம் பார்த்து தங்கள் சுவட்டினை பெற்றுக்கொள்வார்கள். கன்றுகள் மற்றும், பல் உடைக்காத மாடுகள் D பிரிவில் போட்டியிடும், பெரிய விசை காளைகள்  A பிரிவிலும் இருக்கும். ஏனையவை C, B பிரிவுகளில் போட்டியிடும். பங்குபற்றும் காளைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை மூன்றாகவோ, நான்காகவோ விடப்படும், அவற்றில் ஒன்று அல்லது இரண்டு வீதம் தேர்வாகி மீண்டும் போட்டியிடும். இவ்வாறு இரண்டு மூன்று என்றவாறு சுற்றுக்களை நடாத்தி வெற்றிக் காளை தேர்வாகும். தேர்வாகும் காளைக்கு பரிசுகள் கிடைக்கும்.

அதைவிட A பிரிவு காளைகளின் விலை சுமார் 15 இலட்சங்கள் இருக்கும். D பிரிவு காளைகள் 6 இலட்சங்கள் வரை விற்கப்படுமாம்.  

நுகம்/துலாவில் கொழுவும்போது மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் குழப்பும் சோடிகள் போட்டியில் இருந்து நீக்கப்படும். ஒருபிரிவில் ஓடிய காளை இன்னொரு பிரிவில் ஓட முடியாது. ஆனால் சவாரிக்காரர் வேறுபட்ட சோடிகளை செலுத்தமுடியும். 50 மீற்றர் இடைவெளியில் வண்டிகள் மோதக்கூடாது, சக்கரம் உடைந்தாலும் ஓடி வரவேண்டும் என்பனவும் விதிமுறைகளில் சில. கொடி அசைத்தலுடன் போட்டி தொடங்கும்.

இந்த சந்ததியினரையும் கவரும் மாட்டு வண்டி சவாரி 

இந்த சவாரி  விளையாட்டில் பரிசுத்தொகை அல்லது பரிசு என்பது பெறுமதியில் சிறியது. சைக்கிள் அல்லது வேறு எதாவது சிறிய உபரணமாக இருக்கும். முன்பு தங்கப்பதக்கம் கொடுப்பார்களாம். காளைகளை திடலுக்கு கொண்டுவருவதற்கு பாரஊர்திகளுக்கு செலவாகும் பணத்தொகை என்பது அதைவிடப்பெரியது. முற்றுமுழுதாக சந்தோசம், பெருமை, பாரம்பரியம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இதில் உயிரைக் கொடுத்து ஈடுபடுகின்றார்கள். இந்த விளையாட்டில் பெரும் உடற்சேதம் ஏற்படுதலும் வழமை, அங்கே நிக்கும் வயதானவர்கள் பெருமையாக தளிம்புகளை காட்டிக் கொள்வார்கள். அது அவர்களுக்கு பதக்கம் போல இருக்கும்.  பகை இலகுவில் ஏற்பட்டாலும் இந்த விளையாட்டின் மோகம் இன்னும் இருக்கவே செய்கிறது சவாரிக்காரர்களுக்கு.

இப்போது  முன்னரை விட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள், பார்வையாளராகவும் சரி, போட்டியாளராகவும் சரி அவர்களின் பங்கு மிக அதிக அளவிலே இருக்கிறது. சிறுவர்களும் ரசிக்க தொடங்கியிருக்கும்  இந்த விளையாட்டு அழிந்து போகும் ஆபத்தை தாண்டி விட்டதனை உணர்கிறேன். மாட்டுவண்டி சவாரி என்பது இரண்டு உயிர்களை இணைத்து இன்னும் ஒரு உயிர் இணைந்து நடத்தும் ஒரு நிகழ்வு, மூன்றும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான்  வெற்றி, ஆனால் பரிசுகள் குறிவைக்கப்படுவதில்லை.

மாடு - எங்கள் சொத்து.
மாட்டுவண்டி சவாரி - எங்கள் பாரம்பரியம்.

படங்கள் - வடமாகாண ரீதியான மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி மட்டுவில் சந்திரங்கிராய்  சவாரித்திடலில் நடைபெற்றது.

-தமிழ்நிலா-

இக்கட்டுரை ஊறுகாய் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://oorukai.com/?p=1985
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா